மகளிர் தினவிழாவையொட்டி சுகாதாரத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு

மகளிர் தினவிழாவையொட்டி சுகாதாரத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.

Update: 2018-03-08 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி சுகாதாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறையை சேர்ந்த மகளிர் களப்பணியாளர்கள், பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், ஊரக பகுதிகளில் கழிவறை கட்டி சிறப்பாக பராமரித்து வரும் குடும்ப தலைவிகளுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்.

அதன் பின்னர் கலெக்டர் பேசுகையில், வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி முழு பயன்பாட்டில் கொண்டு வருதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல், ஊராட்சிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் சுகாதாரமாக பராமரித்தல் போன்ற பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை மார்ச் 31-ந் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையில்லா மாவட்டமாக அறிவிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், செயற்பொறியாளர்கள் ராஜா, சுந்தரேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்