தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-09 21:45 GMT
அம்பத்தூர்,

கடலூர் மாவட்டம் பத்தரைக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 29), ரகு (26). இவர்கள் இருவரும் சென்னை வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி தெருவில் தங்கி, ஐ.சி.எப். ரெயில்வே பணிமனையில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு சரவணன், ரகு இருவரும் ஐ.சி.எப். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஐ.சி.எப். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் தட்டிக்கேட்டார். ஓட்டலில் சாப்பிட்டதற்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு செல்லும்படி கூறினார்.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பி ஓட முயன்ற 2 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சரவணன், ரகு இருவரையும் ஐ.சி.எப். போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்