புதுவை ஓட்டலில் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரவுடி, கிரண்பெடி அதிர்ச்சி

புதுவையில் உள்ள ஓட்டலில் கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய ரவுடியின் வீடியோ படத்தை பார்த்து கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2018-03-12 22:45 GMT
புதுச்சேரி,

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பீனு. கடந்த மாதம் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். இது பற்றிய தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது புதுவையிலும் நடைபெற்றுள்ளது.

வில்லியனூரை அடுத்த உருவையாறு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜேக் என்ற ஜெகன்(வயது 35). இவர் மீது ஒரு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து புதுவையில் உள்ள ஓட்டலில் தனது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ செல்போன்களில் பரவியது. கவர்னர் கிரண்பெடிக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிய வந்தது. அதில், பிறந்தநாள் கொண்டாடிய ஜெகனுக்கு புதுவையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் பலர் வாழ்த்து தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த கொண்டாட்டம் நள்ளிரவு வரை நடந்தது என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ குறித்து அதிர்ச்சி அடைந்த கவர்னர் கிரண்பெடி இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அந்த வீடியோவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமிற்கு அனுப்பி வைத்தார்.

உடனே அவர் சம்பந்தப்பட்ட வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் விசாரித்து அந்த ரவுடியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஜெகனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடிகள் யார்? யார் என்ற பட்டியலை தயாரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீடியோ விவகாரம் புதுவை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடிகள் வேறு ஏதாவது சதிதிட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி ஜெகன் தொடர்பாக வெளியான வாட்ஸ்அப் வீடியோ ஏற்கனவே இருந்த பழைய புகைப்படம். அதைத்தான் புதிய படம் போல் வெளியிட்டு இருக்கிறார்கள் எனவும் தற்சமயம் இதுபோன்ற விழா எதுவும் நடைபெறவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்