வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-04-16 22:15 GMT
வாடிப்பட்டி,

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. சமீபமாக இந்த வேலை வாய்ப்பு தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பூச்சம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் கிராமங்களில் 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் முறையாக 100 நாள் திட்ட வேலையை வழங்க கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த தேசிய ஊரக வேலை திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதாவிடம் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மனுகொடுத்தனர். அதில் வாரந்தோறும் ஊதியம் வழங்ககோரியும், வங்கி கணக்கில் விடுபட்ட பணியாளர்களுக்கு உரிய ஊதியம் ஏற்ற கோரியும் கோரிக்கைவிடுத்தனர். உடன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர் மன்னன், துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்(சத்துணவு) சார்லஸ், உதவி பொறியாளர் துர்காம்பிகா, ஊராட்சி செயலாளர் ரேவதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் செய்திகள்