கல்யாணில் பயங்கர வெடிபொருட்களுடன் 2 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-04-16 22:41 GMT
அம்பர்நாத்,

கல்யாணில் பயங்கர வெடிபொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தானே மாவட்டம் கல்யாண் மான்பாடா அருகில் கோன் பகுதியில் உள்ள தலோஜா சாலையில் வாலிபர்கள் 2 பேர் வெடிபொருட்களுடன் வருவதாக நேற்றுமுன்தினம் மாலை கல்யாண் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக சாக்குப்பைகளுடன் இரண்டு பேர் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தனர்.

போலீசார் அவர்கள் வந்த ஸ்கூட்டரை மறித்து, சாக்குப்பைகளை திறந்து பார்த்தனர். அதில், ஏராளமான வெடிபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றில் 199 ஜெலட்டின் குச்சிகளும், 100 டெட்டனேட்டர்களும் இருந்தன. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் அசோக் டாம்கானே(வயது28), சமீர் துலே(24) என்பது தெரியவந்தது.

இவ்வளவு வெடிபொருட்கள் இவர்களுக்கு கிடைத்தது எப்படி? என்ன காரணத்திற்காக அவற்றை கொண்டு சென்றனர்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்