கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

Update: 2018-04-29 22:27 GMT
பென்னாகரம்,

இந்தநிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதையொட்டி அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதையொட்டி சுற்றுலா பயணிகள் தொங்கு பாலம், பார்வைகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மீன் கடைகளில் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்