போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2018-05-04 22:30 GMT
திருச்சி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே வருகிற 8-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டு விவசாய சங்கத்தினர் கோட்டை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். 

அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. இதனால் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவரும், உண்ணாவிரத கூட்டு நடவடிக்கை குழு தலைவருமான பூ.விசுவநாதன் தலைமையில் த.மா.கா. விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அங்கு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் கபிலனிடம் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்