ஒரத்தநாடு அருகே பரிதாபம்: பள்ளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி அக்கா-தம்பி பலி

ஒரத்தநாடு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி அக்கா-தம்பி பரிதாபமாக பலியாயினர்.

Update: 2018-05-04 22:45 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்க சென்ற அக்கா-தம்பி இருவரும் பள்ளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சேதுராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி நதியா. இவர்களது மகள் திவ்யா(வயது 12), மகன் ஹரிஸ்(11). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குணசேகரன் இறந்து விட்டார். இதனால் திவ்யா மற்றும் அவரது தம்பி ஹரிஸ் ஆகிய இருவரும் சோழபுரம் கிழக்கு கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி சரோஜா வீட்டில் தங்கி இருந்து வந்தனர்.

அங்குள்ள அரசு பள்ளியில் திவ்யா 7-ம் வகுப்பும், ஹரிஸ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை காரணமாக திவ்யாவும், ஹரிசும் நேற்று பகலில் அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றனர்.

சோழபுரம் கிழக்கு கிராமத்தின் அருகே உள்ள வடக்கூர் வடக்கு கிராமத்தில் விவசாயி ஒருவர், ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். நேற்று மாலை இந்த பள்ளத்திற்குள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் திவ்யாவும், ஹரிசும் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திவ்யா அவரது தம்பி ஹரிஸ் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் தங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தனர். அக்காவும், தம்பியும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்