ஓசூரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலைமறியல்

ஓசூரில் கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-04 22:35 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவில் கே.கே.137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் 17,937 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த அயாஸ்கான் மற்றும் நசீர்அகமது என்ற 2 நிர்வாகிகள், இயக்குனர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்ததையடுத்து, அக்கட்சியினர் வங்கி முன்பு திரண்டனர். ஆனால் அவர் கள் இருவரது மனுவும் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்த நிர்வாகிகள் 2 பேருக்கும் இயக்குனர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று உயர் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம், கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறியதோடு, கோரிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், மேற்கு மாவட்ட செயலாளர் மாதேவா தலைமையில், எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்