தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்

சாலமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-05-04 22:43 GMT
கல்லாவி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே சாலமரத்துப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்திற்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிட உள்ளவர்களிடம் இருந்து கடந்த 30-ந் தேதி தேர்தல் அலுவலர் ஞானவேல் மனுக்கள் பெற்றார். அதன்படி அ.தி.மு.க. சார்பில் 18 பேரும், தி.மு.க. சார்பில் 8 பேரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 11 பேரும் மனுக்கள் அளித்தனர்.

ஆனால் மனுக்கள் பெற்று பரிசீலனை செய்து இறுதி பட்டியல் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் நேற்று கடன் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்