உலக்கையால் தாக்கப்பட்ட கொத்தனார் சாவு, மனைவி-மைத்துனர் கைது

உலக்கையால் தாக்கப்பட்ட கொத்தனார் மருத்துவமனையில் இறந்து போனார். இதுதொடர்பாக அவரது மனைவியும் மைத்துனரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-05 22:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு வசந்தம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுத்து (வயது48). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் தினமும் குடித்து விட்டு மனைவி சண்முகசெல்லத்தாயிடம்(37) தகராறு செய்து வந்தார். இது குறித்து சின்னசுரைக்காய்பட்டி தெருவில் வசித்து வரும் தனது தம்பி பரமகுருவிடம்(31) சண்முகசெல்லத்தாய் கூறினார்.

சகோதரி முறையிட்டதை தொடர்ந்து ஜோதிமுத்துவை சந்தித்து பரமகுரு கண்டித்துள்ளார். குடிப்பதை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்காள் மற்றும் தம்பி இருவரும் உலக்கையால் ஜோதிமுத்துவை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக சண்முகசெல்லத்தாய் மற்றும் பரமகுருவை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்