தானேயில் மின்சார ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்

தானேயில் மின்சார ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

Update: 2018-05-05 23:33 GMT
தானே,

தானே மாவட்டம் டிட்வாலாவை சேர்ந்தவர் முகமது அன்சாரி (வயது30). தையல்காரர். இவரது மனைவி ஷீபா(22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் காட்கோபர் ராஜவாடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு வீடு திரும்பினார். இரவு திடீரென அவருக்கு பிரசவ வலி உண்டானது.

இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல மின்சார ரெயிலில் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 12.15 மணியளவில் மின்சார ரெயில் தானே ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஷீபா வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். உடனே முகமது அன்சாரி தானே ரெயில் நிலைய போலீசாரிடம் உதவி கோரினார்.

உடனடியாக அவர்கள் அங்குள்ள ஒரு ரூபாய் கிளினிக்கில் இருந்த டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டாக்டர் மற்றும் நர்ஸ் வந்து பிரசவம் பார்த்தனர். இதையடுத்து ஷீபாவுக்கு மின்சார ரெயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் தானே மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்