ஈரோடு அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மோதி 2 பக்தர்கள் சாவு

ஈரோடு அருகே கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-05-10 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 28). இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு லலித், அஸ்வத் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதேப்பகுதியை சேர்ந்தவர் விஜயன் (31). இவருடைய மனைவி ஜானகி (28). இவர்களுக்கு பரத் என்ற மகனும், மித்திகா என்ற மகளும் உள்ளனர். சத்தியராஜும், விஜயனும் கூலித்தொழிலாளர்கள்.

இந்தநிலையில் டி.என்.பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன், கருப்பராயன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு விஜயனும், சத்தியராஜும் மூலவாய்க்கால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்கு நடந்து வந்துகொண்டு இருந்தனர்.

வாணிப்புத்தூர் மேடு அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் சத்தியராஜ் மற்றும் விஜயன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சத்தியராஜுக்கும், விஜயனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த வாணிப்புத்தூர் கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்குமார் மற்றும் சந்தோஷ்குமாருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சத்தியராஜ், விஜயன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சந்தோஷ்குமார், மோகன்குமார் ஆகிய 2 பேரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மோகன்குமார் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சந்தோஷ்குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த சத்தியராஜ், விஜயன் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

அம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்ற பக்தர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்