முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மரணம் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார்

அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மரணம் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-05-10 22:45 GMT
மேலூர்,

மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்து சென்னையில் இருந்து விமானத்தில் மதுரைக்கு வந்த டி.டி.வி.தினகரன் குடும்பத்தினருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சாமியின் உடல் மேலூரில் உள்ள மில்கேட் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்பு தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அ.ம.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மூர்த்தி, பெரியகருப்பன், முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம் உள்பட பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக ஆர்.சாமி வெற்றி பெற்றார். டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளரான சாமி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளராக பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு மேலூர் நகராட்சி 27-வார்டு உறுப்பினராக அரசியல் நுழைந்த அவர், மேலூர் அ.தி.மு.க. நகர் செயலாளர், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக என பதவி வகித்தார். 2001-ல் சட்டமன்ற உறுப்பினரான அவர், தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். பின்பு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்த போது தினகரன் அணியில் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சரண்யா, திரிஷா என இரு மகள்களும், ஆசையன் என்ற மகனும் உள்ளனர். 

மேலும் செய்திகள்