கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

மணல் குவாரி திறக்கக்கோரி கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-10 23:00 GMT
கடலூர்,

கடலூர் தாலுகாவில் திருமாணிக்குழி, வானமாதேவி, விலங்கல்பட்டு, எலந்தம்பட்டு, சன்னியாசிப்பேட்டை, அக்கடவல்லி, எனதிரிமங்கலம், காமாட்சிபேட்டை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரி திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதன்பிறகு சங்க நிர்வாகிகள் கருப்பையன், திருமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களை மட்டும் சப்-கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஜமாபந்திக்கு சென்றிருந்ததால், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் தாசில்தார் ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் துணை தாசில்தார் அசோகன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் அசோகன், ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள் முற்றகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் கூறியதாவது:-

திருக்கண்டேஸ்வரத்தில் வருகிற 21-ந்தேதி மாட்டு வண்டிக்கு மணல் குவாரி திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதேபோல் அக்கடவல்லி, எனதிரிமங்கலம் ஆகிய இடங்களில் ஒரு மாதத்துக்குள்ளும், வானமாதேவி, சன்னியாசிப்பேட்டை, எலந்தம்பட்டு, விலங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஒன்றரை மாதத்துக்குள்ளும் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார். 

மேலும் செய்திகள்