கருவூல கணக்குத்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்: முதன்மை செயலாளர் சு.ஜவஹர் தலைமையில் நடந்தது

ஈரோடு மாவட்ட கருவூல கணக்குத்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் முதன்மை செயலாளர் சு.ஜவஹர் தலைமையில் நடந்தது.

Update: 2018-05-11 22:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் குறித்து தெரிவு செய்யப்பட்ட துறையின் பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மற்றும் கருவூல கணக்குத்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளரும் ஆணையாளருமான தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பணிப்பதிவேடு கணினி மயமாக்குதல் தொடர்பாக விடுபட்டு உள்ள பதிவுகள் வலைதள சம்பள பட்டியல் மென்பொருளுடன் ஒப்பிட்டு சரி செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் பேசிய முதன்மை செயலாளர் சு.ஜவஹர் கூறும்போது, ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் முன்னோடி மாவட்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. முன்னோடி மாவட்டம் என்ற பெருமையை தக்க வைக்கும் வகையில் இங்கு திட்டப்பணிகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும், இனி வருங்காலங்களில் புதிதாக பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு இணையதளம் மூலம் பணிப்பதிவேடு தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது’ என்றார்.

ஆய்வின்போது, இணையதள செயலி (ஆப்) பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், செயலி செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஓய்வூதியர்களையும் சந்தித்து முதன்மை செயலாளர் சு.ஜவஹர் குறைகளை கேட்டார். பின்னர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் கூடுதல் இயக்குனர் ஏ.பி.மகாபாரதி, கோவை மண்டல இணை இயக்குனர் தே.செல்வசேகரன், கருவூல கணக்குத்துறை நேர்முக உதவியாளர் மா.புவியரசு, சென்னை கருவூல அதிகாரி ஏ.எம்.மாதவன், ஈரோடு மாவட்ட கருவூல அதிகாரி வி.ஆறுமுகம், விப்ரோ நிறுவன திட்ட மேலாளர் ராம்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்