தேனாம்பேட்டை வாலிபர் கொலையில் 6 பேர் கைது

சென்னை தேனாம்பேட்டை வாலிபர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-11 22:10 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மதன் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் பட்டப்பகலில் சத்தியமூர்த்தி நகரில் வைத்து மதன் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை நடந்த சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் போலீஸ்காரர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

அவர் கொலை குற்றவாளிகளை காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் ஒரு குடோனில் தங்க வைத்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. போலீஸ்காரர் மூலம் படப்பையில் குடோனில் தலைமறைவாக தங்கியிருந்த கொலையாளிகள் செல்வமணி, சீமான், அஜித், குமரேசன், தீனா, குமரகுரு ஆகிய 6 பேரை நேற்று காலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பிக்க உதவிய குற்றத்திற்காக போலீஸ்காரரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. 

மேலும் செய்திகள்