செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு

செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2018-05-12 22:30 GMT
செஞ்சி,

செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சி கோட்டை செல்லியம்மன் கோவில் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் நவம்பட்டு கிராமத்தை சேர்ந்த கங்காதரன் (வயது 43), கல்வட்டை சேர்ந்த எத்திராஜ் மகன் பஞ்சாட்சரன்(41), துரைக்கண்ணு மகன் அன்பழகன்(32) என்பதும், கடந்த ஆண்டு செஞ்சியை சேர்ந்த ஆதிநாராயணன், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவுஸ்பாஷா ஆகியோரது வீடுகள் மற்றும் செஞ்சி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகளை மீட்ட போலீசார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்