கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2018-05-12 22:30 GMT
கடலூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பெண் ஊழியர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் மீது கட்டாய விடுப்பு, பணி விடுப்பு, கட்டாய ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் ஊரகவளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், பணி மேற்பார்வையாளர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ரெங்கசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்