அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் முறிந்து விழுந்தன

அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2018-05-12 23:00 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள், தகர அட்டை சூறாவளி காற்றுக்கு பறந்தன. சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகள், போர்டுகள் சேதமடைந்தன.

அரூர் பகுதியில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த சூறாவளி காற்றுக்கு கூக்கடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவருடைய தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த 400–க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததை கண்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் வீடுகளை வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்