பெஸ்ட் பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த பெண் கைது 200 பணப்பை, 96 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

பெஸ்ட் பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் இருந்து 200 பணப்பை, 96 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-12 22:30 GMT
மும்பை, 

பெஸ்ட் பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் இருந்து 200 பணப்பை, 96 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

பணப்பை திருட்டு

மும்பை தாராவி, சாகுநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். சம்பவத்தன்று இவரது மனைவி பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவரின் பணப்பையை மர்ம நபர் திருடி சென்றார். மர்ம நபர் பணப்பையில் இருந்த ஏ.டி.எம். கார்டு, அதில் எழுதி இருந்த பின் நம்பரை பயன்படுத்தி சயான் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.49 ஆயிரம் எடுத்தார்.

மேலும் அவர் மான்கூர்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் இருந்தும் பணம் எடுத்து இருந்தார்.

பெண் கைது

இதுகுறித்து சஞ்சய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சஞ்சய் மனைவியின் கைப்பையை திருடியது மான்கூர்டு, சிக்குவாடியை சேர்ந்த சுபியா இம்ரான் சேக் (வயது24) என்ற பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பணப்பை, ஏ.டி.எம். கார்டுகள்

மேலும் சுபியா இம்ரான் சேக்கின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் இருந்து 200 பெண்கள் பயன்படுத்தும் பணப்பை, 96 ஏ.டி.எம். கார்டு, 52 ஆதார் கார்டு, 45 பான் கார்டு மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர். சுபியா இம்ரான் சேக் தாதரில் பூ வியாபாரம் செய்கிறார். வியாபாரம் முடிந்து செம்பூருக்கு பெஸ்ட் பஸ்சில் செல்வார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் அதிகம் பெண் பயணிகளிடமே திருட்டில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இவர் தினமும் ரூ.1000 முதல் 10 ஆயிரம் வரை திருடியதாக கூறப்படுகிறது. சுபியா இம்ரான் சேக்கிற்கு குழந்தைகள் உள்ளனர். அவர் பயணிகளிடம் கைவரிசை காட்டிய பணத்தில் குழந்தைகளை கவனிக்க பணியாளை அமர்த்தி இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது.

மேலும் செய்திகள்