திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

ஆரணி அருகே திருமணமான 3 மாதத்தில் தூக்குப் போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-05-12 22:41 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த களம்பூர் அருகே கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இவர்களின் மகள் பாரதிக்கும் (வயது 23) ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (27) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. துரைசாமி கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கணவன் துரைசாமியிடம் சண்டை போட்டுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் இரவு துரைசாமி பாரதிக்கு போன் செய்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த பாரதி வீட்டின் மாடிக்கு சென்று தூக்குப் போட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக களம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாரதிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்