பரமக்குடி பகுதியில் வாருகால் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி

பரமக்குடி பகுதியில் வாருகால் சேதமடைந்துள்ளதாலும், போகலூரில் வாருகால் வசதி இல்லாததாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2018-05-13 22:15 GMT
பரமக்குடி,

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்டது வாணியர் தெரு. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாருகால் பல ஆண்டுகளாக உடைந்து கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரப்படுகின்றனர். எனவே பெரிய கற்களை உடைந்து கிடக்கும் வாருகால் மீது போட்டு அதில் ஏறி வீட்டுக்கு செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், வாகனங்களை தங்களின் வீடுகளுக்கு முன்பு வைக்க முடியாமல் மெயின் சாலையில் நிறுத்திச்செல்கின்றனர்.

வாருகால் சேதமடைந்துள்ளதால் குழந்தைகள், வயதானோர் என பலர் தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கால்வாய் வாருகாலை சீரமைக்க கோரி பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி தாலுகா போகலூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை வாருகால் வசதி இல்லாததால், வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர் அனைத்தும் தெருவில் தான் விடப்படுகின்றன. இதனால் கழிவுநீர் அனைத்தும் சாலைகளிலேயே தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் உள்ள மழலையர் பள்ளி முன்பாக கழிவுநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. அதனை கடந்து தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே போகலூர் பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்