கட்டிட வேலை செய்த போது 8–வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கோவையில் கட்டிட வேலை செய்த போது 8–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-05-13 22:00 GMT

கோவை,

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 19). இவரும், அதேபகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது 8–வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சகதொழிலாளர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விசாரணையில், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் சினோஜ், என்ஜினீயர் கவுதம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்