குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10 வாகனங்கள் குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது.

Update: 2018-05-13 22:30 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு கலெக்டர் எஸ்.ஏ.ராமன், போக்குவரத்து துணை ஆணையர் பொன்.செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, தாசில்தார் பி.எஸ்.கோபி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், பரதராமி, லத்தேரி, பள்ளிகொண்டா, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 42 பள்ளிகளின் 110 வாகனங்களில் ஆவணங்களை சரிபார்த்தனர். பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் அளித்தனர்.

அப்போது தீத்தடுப்பு கருவிகளை எவ்வாறு இயக்குவது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதில் 10 வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததால் அதனை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு கொண்டுவர திருப்பி அனுப்பினர்.

மேலும் பள்ளி வாகன டிரைவர்களிடம் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்தும், அந்தந்த நிறுத்தங்களில் வாகனம் நிற்கும்போது மாணவர்களை பாதுகாப்பாக ஏறி, இறங்குவதை உறுதி செய்தபின்பு வாகனத்தை எடுக்க வேண்டும் எனவும், வாகனங்களில் கண்டிப்பாக உதவியாளர் அல்லது நடத்துனர் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் அவர்களுக்கு 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்