பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு தர்மஅடி: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சூளையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-05-13 22:45 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை சூளை ஆண்டிமுத்து தெருவை சேர்ந்தவர் பலராமன். ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி கலா (வயது 38). இவர் தையல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கலா அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடினார். உடனே அதிர்ச்சி அடைந்த கலா ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் சங்கிலி பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த அப்பு என்கிற விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கலாவிடம் பறித்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்