பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-05-13 22:30 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி கீழராஜவீதியில் நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மன்னார்குடி ஜெயம்கொண்டநாதர் கோவில், சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோவில், கைலாசநாதர் கோவில், சொக்கநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், அண்ணாமலைநாதர் கோவில், திருப்பாற் கடல்-அரித்திராநதி தெப்பக் குளத்தில் உள்ள காசிவிசுவ நாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து பக்தர்களுக்கு ருத்ரகோடீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்