நாசவேலைக்கு சதி திட்டம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் மும்பையில் கைது பாகிஸ்தானில் பயிற்சி பெற்று திரும்பியவர்

நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய பயங் கரவாத அமைப்பை சேர்ந்த வாலிபரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.

Update: 2018-05-13 22:30 GMT
மும்பை,

நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய பயங் கரவாத அமைப்பை சேர்ந்த வாலிபரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் மும்பையில் கைது செய்தனர். இவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

வாலிபர் கைது

நாட்டின் நிதிநகரமான மும்பை பயங்கரவாதிகளின் கழுகு கண் பார்வையில் இருக்கிறது. இந்த நிலையில், மும்பை மேற்கு புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.

இந்த வாலிபரை பயங்கரவாத தாக்குதல் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

தாக்குதலுக்கு சதி திட்டம்

அதன்பேரில், அந்த வாலிபர், அவரை சார்ஜா சென்று சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து துபாய் சென்ற பின்னர் பயங்கரவாத தாக்குதல் பயிற்சிக்காக பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். அதில் தற்கொலை படை தாக்குதல், துப்பாக்கிகளை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் மும்பை திரும்பிய அவர் முக்கிய பிரமுகர்களை கொல்லவும், மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் சதி திட்டத்தை தீட்டியுள்ளார்.

இந்த தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 21-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப் பட்டார்.

மேலும் செய்திகள்