சித்தோடு அருகே தந்தையின் நினைவு நாளில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

சித்தோடு அருகே தந்தையின் நினைவு நாளில் தூக்குப்போட்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-05-13 23:34 GMT
பவானி, 

பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் மங்களகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி அன்னக்கொடி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 16). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பு படித்து முடித்து பிளஸ்-2 செல்ல இருந்தார். இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில்

நேற்று ஆனந்தராஜின் நினைவுநாள் ஆகும். இதையொட்டி தந்தையின் பிரிவில் மனவேதனையுடன் காணப்பட்ட நந்தினி துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார்.

இதனால் அவர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை கவனித்த நந்தினியின் தாய் அன்னக்கொடி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்