ஆட்டோ மீது கார் மோதல்: பயிற்சி பெண் காவலரின் தந்தை பலி 2 பெண்கள் படுகாயம்

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பயிற்சி பெண் காவலரின் தந்தை பரிதாபமாக இறந்தார். 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

Update: 2018-05-14 22:15 GMT

காஞ்சீபுரம்,

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 53). ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் மோகனப்பிரியா. இவர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

கதிர்வேல், தன்னுடைய மனைவி அமுதா, உறவினர் குணவதி ஆகியோருடன் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் தனது மகள் மோகனப்பிரியாவை பார்க்க சென்னையில் இருந்து ஆட்டோ மூலம் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் வந்தார்.

மகளை பார்த்துவிட்டு, அதே ஆட்டோவில் 3 பேரும் சென்னைக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரைப்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, வேலூரில் இருந்து சென்னைக்கு வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த கதிர்வேல், அமுதா, குணவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அனைவரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். குணவதி, அமுதா இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த உடன் காரை நிறுத்தி விட்டு, அதை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ மீது மோதிய காரை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்தவரை தேடி வருகிறார்.

தந்தை கதிர்வேல் உடலை பார்த்து பயிற்சி பெண் காவலர் மோகனப்பிரியா கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(34). கொத்தனார். இவர், தனது மோட்டார்சைக்கிளில் சென்னையில் உள்ள தனது மனைவியை பார்க்க காட்பாடியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்தார்.

காஞ்சீபுரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்