அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது

அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-14 23:00 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சன்ராஜ் என்ற ராஜ்குமார் (வயது 21), பெயிண்டர். இவருடைய நண்பர் விஜயன் (26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கீழாந்தூர் பகுதியில் உள்ள லலிதா (50) என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாக்கெட் கேட்டு உள்ளனர்.

அப்போது லலிதா தண்ணீர் பாக்கெட் இல்லை என்று கூறினார். இதனால் ராஜ்குமாருக்கும், லலிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கட்டையால் தாக்கினார்

அப்போது அங்கு வந்த லலிதாவின் மகன் சேட்டு என்ற சுதாகரன் (26) கீழே கிடந்த கட்டையை எடுத்து ராஜ்குமாரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

தாய்-மகன் கைது

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, லலிதா, சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்