முதல்-அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-14 22:15 GMT
பள்ளிபாளையம்,

முகநூலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் குறித்து தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணி ஆகியோர் படத்தை போட்டு அதன் கீழ், ‘இறையமங்கலம் இளையபெருமாள் கோவில் அருகில் 116 ஏக்கர் நிலத்தை ரூ.86 கோடிக்கு வாங்க உள்ளோம். பினாமி பெயரில் பதிவு செய்யவும், பார்த்துக்கொள்ளவும் ஆட்கள் தேவை’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இறையமங்கலம் என்ற ஊர் நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே அமைந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் மொளசியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் (வயது 33) என்பவர் புகார் செய்தார். அதில் முதல்-அமைச்சர், அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது

இதுதொடர்பாக மொளசி அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஆவார். திருச்செங்கோடு ஒன்றிய அ.ம.மு.கழகத்தைச் சேர்ந்தவர். கைதான தினேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்