குளிக்க சென்றபோது கொல்லிமலை அருவியில் இருந்து தவறிவிழுந்து என்ஜினீயர் பலி

கொல்லிமலை அருவியில் குளிக்க சென்றபோது அருவியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி மனைவி கண்எதிரே என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-05-15 23:00 GMT
சேந்தமங்கலம்,

தஞ்சை மாவட்டம் திருவையாறு புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 29). சிவில் என்ஜினீயர். இவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வள்ளலார் கோட்டத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி காளஸ்வரி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. காளஸ்வரி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். மாதவன் கொல்லிமலையில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார். காளஸ்வரி திருவையாறில் இருந்தார். பேராவூரணியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் காளஸ்வரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காளஸ்வரி கொல்லிமலைக்கு வந்தார். கணவனும், மனைவியும் கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவிக்கு குளிக்க செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் நேற்று காலை கொல்லிமலை மாசிலா அருவிக்கு சென்றனர். அங்கு கணவனும், மனைவியும் குளித்தனர். பின்னர் மாதவன் அருவியின் மேல்பகுதிக்கு சென்றார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மாதவன் தவறி கீழே விழுந்தார். பாறை மீது விழுந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்ததும் காளஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாதவன் குளித்த அருவியில் சுற்றுலா பயணிகளும் குளித்துக்கொண்டு இருந்தனர். அவர் தவறிவிழுந்து இறந்ததை அறிந்ததும் மற்ற சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்