கார் டிரைவர் படுகொலை மனைவி கள்ளக்காதலனுடன் கைது

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கார் டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-15 23:15 GMT
சென்னை,

சென்னை அண்ணாநகர் கிழக்கு வ.உ.சி.காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 27). இவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி சுமித்ரா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோபியின் நண்பர் கலைச்செல்வன்(24), அவரும் கார் டிரைவர்.

இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அதுபோல் ஒன்றாக மது அருந்தினார்கள். பின்னர் கோபியை கைத்தாங்கலாக அவரது வீட்டுக்கு கலைச்செல்வன் அழைத்துவந்து படுக்கவைத்துவிட்டு சென்றுவிட்டார். வெளியில் சென்றிருந்த சுமித்ரா அதன்பின் வீட்டுக்கு வந்தார். கோபி மயக்கத்தில் கிடந்ததால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை டாக்டர் கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கோபியின் கழுத்தில் காயம் இருந்ததால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர் கள் தெரிவித்தனர். இதனால் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சிராஜூதீன், இன்ஸ்பெக்டர் தயாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கோபியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிரடி விசா ரணையை தொடங்கினார்கள்.

கோபி ஒரு மாதத்துக்கு முன்பு தனது மனைவி சுமித்ரா மீது டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது மனைவி நண்பன் கலைச்செல்வனோடு கள்ளக்காதலில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தார். போலீசார் அப்போது சுமித்ராவிடம் விசாரித்து எச்சரித்து அனுப்பினார்கள். இதை ஒரு துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் சுமித்ராவிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சுமித்ரா தனது காதலன் கலைச்செல்வன் மூலம் போதை மயக்கத்தில் இருந்த கோபியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவரை தீர்த்துக்கட்டியதாக சுமித்ரா பரபரப்பு வாக்குமூலம் கொடுத் ததாக போலீசார் தெரிவித்தனர்.

கலைச்செல்வனும், சுமித்ராவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். கலைச்செல்வன் திருமணம் ஆகாதவர். அவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் தான். முன்கூட்டியே திட்டமிட்டு கோபிக்கு மது வாங்கிக்கொடுத்து மயக்கி பின்னர் தீர்த்துக்கட்டி உள்ளனர். இதற்கு வசதியாக தனது 2 குழந்தைகளையும், சுமித்ரா பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வீட்டில் கொண்டுவிட்டுள்ளார்.

கொலையை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர்போல வந்து அழுதுபுரண்டு நாடகமாடி கோபியை ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த படுகொலை சம்பவம் டி.பி.சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்