மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியர் உள்பட 2 பேர் கைது

வங்கிக்கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-15 23:04 GMT
மும்பை,

பாந்திரா - குர்லா காம்ப்ளக்ஸ் சைபர் போலீசில் தனியார் வங்கி சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகாரில், மர்ம நபர்கள் தங்கள் வங்கியின் பெயரை பயன்படுத்தி கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கிக்கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த விக்டர் கேன்டி மற்றும் மினஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும், குறிப்பிட்ட தனியார் வங்கியின் பெயரில் எந்த ஆவணங்களும் இன்றி தனிநபர் கடன் தர உள்ளதாக பொது மக்களின் செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்புவார்கள்.

இதை பார்த்து யாராவது அவர்களை தொடர்பு கொண்டால் ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.3 ஆயிரத்து 750 சேவை கட்டணமாக அளித்தால் கடன் தருவதாக கூறுவார்கள். இதை நம்பி தொடர்பு கொண்டவர்களும் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.

இந்த வகையில் அவர்கள் பொது மக்களிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகள்