அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஆசிட் குடித்து தற்கொலை

சென்னை வேப்பேரி பகுதியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-05-15 23:10 GMT
சென்னை,

சென்னை வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜவித் அகமது. இவரது மகன் பைசன் அகமது (வயது 19). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தோல் ஆராய்ச்சி குறித்த படிப்பு பயின்று வந்தார். பைசன் அகமது சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் திடீரென ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பைசன் அகமதுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பைசன் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பைசன் அகமது பல்கலைக்கழகத்தில் படிப்பு சம்பந்தமான திட்ட அறிக்கையை கால தாமதமாக வழங்கியிருக்கிறார். அதனை பேராசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்