தொடர் நகைபறிப்பு சம்பவம்: திண்டுக்கல்லை கலக்கிய மேலும் ஒரு கொள்ளையன் கைது

திண்டுக்கல்லை கலக்கிய மேலும் ஒரு நகைபறிப்பு கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-15 23:38 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா (வயது 36) என்பவர், ஆர்.எம். காலனி 9-வது கிராஸ் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கவிதா அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தினர். விரைவாக செயல்பட்ட போலீசார், 2 மணி நேரத்தில் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தாடிக்கொம்புவை சேர்ந்த முருகையா மகன் பூவரசன் (20) என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகைபறிப்பு சம்பவத்தில், பேகம்பூரை சேர்ந்த முகமது (23) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பூவரசனும், முகமதுவும் சேர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் 3 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பூவரசன் மட்டும் தனியாக சென்று 2 பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது.

இவர் நகையை பறித்துவிட்டு, அதனை முகமதுவிடம் கொடுப்பார். அவர் அதனை விற்று பூவரசனுக்கு பணம் கொடுப்பார். இதையடுத்து 2 பேரிடமும் இருந்து 30½ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர், நகைகளை யாரிடம் விற்று பணம் பெற்றார்?, நகை பறிப்பில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்