கொடைரோடு அருகே தனியார் நிறுவனத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 60 தொழிலாளர்களுக்கு வாந்தி-மயக்கம்

கொடைரோடு அருகே தனியார் நிறுவனத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 60 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2018-05-15 23:47 GMT
கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரு தனியார் டிராக்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்த 300 தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட சில தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உணவு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை தொழிலாளர்கள் பார்த்தனர். அதில் இருந்த உணவில் பல்லி விழுந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு டாக்டர் மூலம் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 60 தொழிலாளர்களுக்கும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் நிறுவனத்துக்கு வந்து வேலையில் ஈடுபட்டனர். மேலும் உணவில் பல்லி இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்து நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்