குளத்தூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளிப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு

குளத்தூர் அருகே, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2018-05-16 20:30 GMT

விளாத்திகுளம், 

குளத்தூர் அருகே, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்–2 மாணவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம். பனை ஏறும் தொழிலாளி. இவருடைய மகள் முத்துலட்சுமி (வயது 16). இவர் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு எழுதியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் முத்துலட்சுமி 2 பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீக்குளிப்பு

அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தவுடன் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டுக்கு ஓடி வந்தனர். அவருடைய உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்