பிளஸ்–2 தேர்வில் 95.52 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் தூத்துக்குடி 7–வது இடத்துக்கு தள்ளப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.52 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதேசமயம், மாநில அளவில் கடந்த ஆண்டு 4–வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் தற்போது 7–வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள

Update: 2018-05-16 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.52 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதேசமயம், மாநில அளவில் கடந்த ஆண்டு 4–வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் தற்போது 7–வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

பிளஸ்–2 தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் மேற்பார்வையில், தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதனை மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

95.52 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் 9 ஆயிரத்து 166 மாணவர்களும், 11 ஆயிரத்து 757 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 923 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 510 மாணவர்கள், 11 ஆயிரத்து 475 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 985 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.52 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 0.92 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டம், மாநில அளவில் 4–வது இடத்தில் இருந்து 7 இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.76 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

கல்வி மாவட்டம்

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 587 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 990 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.60 சதவீதம் தேர்ச்சி ஆகும். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 336 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 995 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.95 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

மேலும் செய்திகள்