ஆலங்குளம் அருகே விபத்து: டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியது

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-05-16 21:30 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

நண்பர்கள்

நெல்லை மாவட்டம் கீழ சுரண்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ராம்குமார் (வயது 23). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு, வேலை தேடி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் மாரிசெல்வம் (24). கொத்தனார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

நேற்று காலையில் ராம்குமார் நெல்லையில் வேலை தேடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய நண்பரான மாரிசெல்வத்தையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் மதியம் நெல்லையில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

வாகனம் மோதி பலி

ஆலங்குளம் அருகே மாறாந்தையை கடந்து கீழ கரும்புளியூத்து அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார், மாரிசெல்வம் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த ராம்குமார், மாரிசெல்வம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்