காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாப சாவு

காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2018-05-16 23:00 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் பக்கமுள்ளது பெரமன்கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னவன், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பெருமா. இவர்களின் மகள் பிரியா (வயது 13). இவர் பன்னிஅள்ளிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று மாலை சிறுமி பிரியா தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள கிணற்று பக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தாள். அந்த நேரம் திடீரென்று பலத்த இடி சத்தத்துடன் மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி சிறுமி பிரியா பலத்த காயம் அடைந்தாள். மேலும் அருகில் இருந்த தாய் பெருமா மயக்கம் அடைந்தார்.

இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் பெருமாவிற்கு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்