“ரூ.10 லட்சம் கேட்டு தாக்கியதால் மருமகனை குத்திக் கொன்றேன்” கைதான மாமனார் வாக்குமூலம்

ரூ.10 லட்சம் கேட்டு தாக்கியதால் மருமகனை குத்திக்கொன்றதாக கைதான மாமனார் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2018-05-16 22:45 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி உறையூர் காவேரி நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத்(வயது 27). கார் டிரைவர். திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அந்தோணி(60). இவர், அதே பகுதியில் சூப் கடை நடத்தி வந்தார். இவரது மகளான ஹென்சி என்ற ஹசீனாவை அப்துல் ரஷீத் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் முகமது ஆரிப் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 2 வருடமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலகல் கண்டார்கோட்டையில் தனது தந்தை வீட்டில் ஹசீனா வசித்து வருகிறார்.

இந்தநிலையில் மேலகல்கண்டார்கோட்டை பள்ளிவாசல் தெருவில் மாமனார் வீட்டு அருகே அப்துல் ரஷீத், நேற்று முன்தினம் இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாமனார் அந்தோணி, மருமகன் அப்துல் ரஷீத்தை கொலை செய்திருக்கலாம் என கருதினர். கொலை நடந்த பிறகு அந்தோணி வீட்டில் இல்லாததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பொன்மலை சந்தை அருகே ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

போலீசார் அவரிடம் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்துல்ரஷீத் கொலை செய்யப்பட்டது குறித்து அந்தோணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், சம்பவத்தன்று அப்துல் ரஷீத் அந்தோணியின் வீட்டுக்கு தனது மகனான முகமது ஆரிப்பை பார்க்க வந்து உள்ளார். அப்போது அப்துல் ரஷீத் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. ரூ.10 லட்சம் கொடு, இல்லை என்றால் வீட்டை விற்று பணத்தை கொடு என்று மாமனாரிடம் அப்துல் ரஷீத் சண்டை போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் அப்துல்ரஷீத், அருகில் கிடந்த கட்டையை எடுத்து மாமனாரை தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்தோணி அருகில் இருந்த சூப் கடையில் பயன்படுத்தும் கத்தியை எடுத்து அப்துல்ரஷீத்தின் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தோணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்