முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2018-05-17 22:40 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள். பிரிவினைவாதம் மற்றும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்த ஒவ்வொரு கன்னடர் களுக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த புதிய அரசு பிரதமர் நரேந்திர மோடியின் வழிக்காட்டுதலின் படி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்‘ என்றார்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், ‘கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள். சில ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த மாநிலம் உங்களின் ஆட்சியில் நிச்சயமாக வளர்ச்சி அடையும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் கர்நாடகத்தின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்‘ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், ‘கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள். உங்களின் தலைமையில் கர்நாடகம் வளர்ச்சியில் உயர்வான இடத்தை அடைய வேண்டும்‘ என்றார்.

மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தனது டுவிட்டரில், ‘கர்நாடக மண்ணின் மைந்தனும், கர்நாடகத்தின் மிகப்பெரிய தலைவருமான எடியூரப்பா மாநில முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பதவிக்காலத்தில் அவர் நல்லாட்சியை கொடுக்க வாழ்த்துகள். இவருடைய தலைமையின் கீழ் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் என்பதை உறுதியாக நம்புகிறேன்‘ என்றார். 

மேலும் செய்திகள்