கைதான பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த குஜராத்தை சேர்ந்த டிரைவர் கைது

மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்க சதி திட்டம் தீட்டியதாக கைதான பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த குஜராத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-17 23:33 GMT
மும்பை,

மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் மும்பையில் பதுங்கியிருந்த பயங்கரவாதி பைசல் ஹசன் மிஸ்ராவை (வயது32) கைது செய்தனர். இவர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல், ஆயுதங்களை கையாளுதல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்ததும், அவர் மும்பை, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

மேலும் மும்பை நிழல் உலக தாதா சோட்டா சகிலின் கூட்டாளியான பரூக் தேவதிவாலாவுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாத தாக்குதல் சதி திட்டத்தில் தொடர்புடையதாக பைசல் ஹசன் மிஸ்ரா சிலரது பெயர்களை தெரிவித்து உள்ளார். இதில் குஜராத் மாநிலம் கட்க் பகுதியை சேர்ந்த அல்லாரகா கான் (32) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குஜராத் விரைந்தனர். காந்திதாமில் வசித்து வரும் அல்லாரகா கானை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் டிரைவராக இருப்பது தெரியவந்தது.

பயங்கரவாத தாக்குதல் சதி திட்டத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்