தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் டாக்டர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுரை.

Update: 2018-05-17 23:45 GMT
ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவது குறித்து மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், ‘நோயாளிகளிடம் டாக்டர்கள் கனிவுடன், பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். மேலும் நோயின் தன்மையை எடுத்துக்கூறி அதற்குரிய உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். இதேபோல நோய்கள் பரவுவதை தடுக்க ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கிராமங்களில் வழங்கப்படும் குடிநீரில் குளோரி பவுடர் கலந்து வினியோகம் செய்ய வேண்டும் என்றார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சக்திவேல் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்