25 சதவீத மானியத்தில் பால்பண்ணை அமைக்க திட்டம் கலெக்டர் தகவல்

பெரியகுளம், உத்தமபாளையம் பகுதியில் 25 சதவீத மானியத்தில் பால் பண்ணை அமைக்கும் திட்டத்துக்கு விண்ணப்பம் அளிக்கலாம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார்.

Update: 2018-05-17 23:40 GMT
தேனி

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 3 பால் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பெரியகுளம் பகுதியில் 2 பண்ணைகளும், உத்தமபாளையம் பகுதியில் ஒரு பண்ணையும் அமைய உள்ளது.

இந்த பால் பண்ணை அமைக்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பம் அளிக்கலாம். பயனாளிகளுக்கு சொந்தமாக அல்லது குத்தகை அடிப்படையில் மாட்டுக்கொட்டகை அமைப்பதற்கு 300 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். இறவை பாசனத்தில் தீவனப்பயிர் பயிரிட ஏதுவாக சொந்தமாக அல்லது குத்தகை அடிப்படையில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இதர திட்டங்களில் பயன் பெற்றிருக்கக்கூடாது.

சொந்தமாக பசுக்கள் அல்லது எருமை மாடுகள் தற்சமயம் வைத்திருக்கக்கூடாது. மாநில, மத்திய அரசு ஊழியராகவோ அல்லது அவர்களது உறவினர்கள் அரசு ஊழியராகவோ இருக்கக்கூடாது. கூட்டுறவு சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்பவர்களாக இருக்கக்கூடாது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆரம்ப கட்ட திட்டப்பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் நிதி வசதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயனாளிகள், நிரந்தரமாக கிராம ஊராட்சியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் பெயர், பாலினம், வயது, சாதிப்பிரிவு, முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் புகைப்படங்கள், முகவரி சான்று, நிலம் வைத்திருப்பதற்கான சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும்.

விருப்பமுள்ள பயனாளிகள் தங்களது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள், திட்டத்தில் பெறப்படும் கறவை மாடுகளை தொடர்ந்து 2 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட கோட்ட உதவி இயக்குனருக்கு உறுதி மொழி ஆவணம் அளிக்க வேண்டும்.

பயனாளிகள், பால் பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்யும் பாலை அருகிலுள்ள ஆவின் நிறுவன கூட்டுறவு சங்கத்தில் அளித்திட உறுதிமொழி ஆவணம் அளிக்க வேண்டும். இந்த பாலுக்கான தொகையை ஆவின் நிறுவனம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.5 லட்சம். இதில் பயனாளிகளின் பங்களிப்பு 75 சதவீதம். அரசு மானியமாக 25 சதவீதம் வழங்கும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்