அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-17 23:55 GMT
வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக் குண்டுவை சேர்ந்த பெரியசாமி மகன் பிரகாஷ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு வத்தலக்குண்டுவில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பெரியகுளம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், பிரகாஷ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே பிரகாஷ் இறந்தது குறித்து தகவலறிந்த அவருடைய உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பிரகாஷை பார்த்து கதறி அழுதனர். பின்னர் விபத்துக்கு காரணமான பஸ் மீது ஆத்திரத்தில் கற்களை வீசினர். அதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வத்தலக் குண்டு போலீசார் உறவினர் களை சமாதானப்படுத்தினர்.

பின்னர் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்