திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை-பணம் திருட்டு

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2018-05-19 23:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஏழுமலை தனது குடும்பத்துடன் கடந்த 17-ந் தேதி பழனி முருகன் கோவிலுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் ஏழுமலையின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், ஏழுமலைக்கு போன் செய்து உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஏழுமலை தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்