எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது முத்தரசன் பேட்டி

எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது என்று திருவாரூரில் முத்தரசன் கூறினார்.

Update: 2018-05-19 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கர்நாடக தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சியமைக்க அந்த மாநில கவர்னர் அழைத்தது தவறாகும். ஆனால் உச்சநீதிமன்றம் நேற்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென வரவேற்கத்தக்க உத்தரவை பிறப்பித்தது. அதன்படி கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்காமல் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

இந்த குழப்பத்திற்கு காரணம் குறுக்கு வழியில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைத்த பா.ஜனதாவிற்கு கிடைத்த படுதோல்வியாகும். மேலும் எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையில்லாத நிலையிலும் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த தெரிந்தே செய்த தவறுக்காக கர்நாடக கவர்னர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் ஜனாதிபதி ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்